தமிழாகரன்
அறிமுகம்
'ஆரோக்கியத்தைப் பராமரிப்பது ஒரு கல்வியியலாளரின் மிக முக்கியமான வேலை. அவர்களின் ஆன்மீக வாழ்க்கை, உலகக் கண்ணோட்டம், மன வளர்ச்சி, அறிவின் வலிமை, தங்கள் சொந்த பலத்தில் நம்பிக்கை ஆகியவை குழந்தைகளின் உற்சாகம், உயிர்ச்சக்தி ஆகியவற்றைப் பொறுத்தது.
'கொரோனா என்னும் பெருந்தொற்று உலகையே அச்சுறுத்தி, ஆட்டிப்படைத்து பல இலட்சக் கணக்கான மனித உயிர்களைக் காவு கொண்டும் தொற்றுக்குள்ளாக்கியும் இருக்கும் இக்கால கட்டத்தில் பெருமளவில் இளம் சிறார்கள் கூடும் பாடசாலையில் தொற்றுப் பரவாமல் தடுக்கும் வகையில் பல முன்னேற்பாடுகள் சுகாதார வழி முறைகள் பாடசாலைகளில் கல்வி அமைச்சு மற்றும் திணைக்களங்களின் பல்வேறு அறிவுறுத்தல்கள், வழிகாட்டுதல்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எத்தகைய அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் மேற்கொள்ளப்பட்டு இவை அனுசரிக்கப்பட்டாலும் மாணவர்கள் இயல்பாகவே தமது தற்சுகாதாரத்தை தாமே பேணும் வகையில் பயிற்றுவிக்கப்பட்டால் மட்டுமே இப்பெருந் தொற்றிலிருந்து எமது சிறார்களைக் காத்துக் கொள்ள முடியும். அந்த வகையில் இப்பெருந்தொற்றை வெல்ல எமது குழந்தைகளுக்கு கற்பிப்பதே ஆசிரியர்களின் தலையாய பணிகளில் ஒன்றாக இன்று உள்ளது.
மாணவர்களின் ஆரோக்கியம், நாட்டின் எதிர்காலம் அதன் தேசிய பாதுகாப்பின் அடிப்படை என்பதை நிலைநிறுத்தி மாணவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் பலப்படுத்தவும் தேவையான நடைமுறைச் செயற்பாடுகளை மேற்கொள்ளுதல் சகல ஆசிரியர்களினதும் கூட்டுச்செயற்பாடு. குறிப்பாக விஞ்ஞானம் மற்றும் சுகாதாரமும் உடற்கல்வியும் போன்ற பாடங்களைப் போதிக்கும் ஆசிரியர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உருவாக்குதல், சுகாதாரமான மற்றும் உடற்கலாசாரத்தின் அடிப்படைகளை அன்றாட வாழக்கை முறையுடன் இணைத்துக் கற்பித்தல் இன்றைய சூழலில் இன்றியமையாததொன்றாக உள்ளது.
'ஆரோக்கியத்தைப் பராமரிப்பது ஒரு கல்வியியலாளரின் மிக முக்கியமான வேலை. அவர்களின் ஆன்மீக வாழ்க்கை, உலகக் கண்ணோட்டம், மன வளர்ச்சி, அறிவின் வலிமை, தங்கள் சொந்த பலத்தில் நம்பிக்கை ஆகியவை குழந்தைகளின் உற்சாகம், உயிர்ச்சக்தி ஆகியவற்றைப் பொறுத்தது ' என்கின்றார் உக்ரேனிய மனிதநேய கல்வியியலாளர் வி.ஏ.சுகோம்லின்ஸ்கி.
அந்த வகையில் ஆசிரியர்களுக்கு இப்பெருந்தொற்றை ஏற்படுத்துகின்ற வைரஸ் பற்றிய அறிவியலை வழங்கும் பொருட்டு இதுவரை காலமும் மனித சமூகத்தை தாக்கிய கொரோனா போன்ற இதர வைரசுக்கள் பற்றிய அறிமுகக் கட்டுரையுடன் பின்தொடர்கின்ற கட்டுரையாக கொரோனா வைரஸ் பற்றிய கட்டுரையும் அமைகின்றது.
வைரஸ் என்றால் என்ன? அவை எவ்வாறு பரவும்? 21ஆம் நூற்றாண்டை அதிர வைத்த சில வைரஸ் தாக்குதல்கள்.
வைரஸ். இந்த சொல்லை சமீப நாட்களாக அடிக்கடி கேட்டிருப்பீர்கள். வைரஸ் என்பது மிகச்சிறிய புரதங்கள் மற்றும் மரபணு பொருட்களை கொண்டதாகும். உலகில் நூற்றுக்கணக்கான வைரஸ்கள் உள்ளன. வைரஸ் தொற்றால்தான் காய்ச்சல், சளி போன்றவையும் ஏற்படுகிறது.
வைரஸ்கள் பரவுவது எப்படி?
சில வகையான வைரஸ்கள் நேரடியாக ஒரு மனிதரிடம் மற்றொரு மனிதருக்கு பரவும். HIV போன்ற வைரஸ், இதனால் பாதிக்கப்பட்ட நபருடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வதன் மூலம் பரவும்.
வைரஸ் தொற்று பரவுதலை மூன்றாக பிரிக்கலாம்.
- என்டமிக் (Endemic )
- எபிடமிக் (Epidemic )
- பான்டமிக் (Pandemic )
எண்டமிக் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் எந்த நேரம் வேண்டுமாலும் பரவக்கூடிய வைரஸாகும். உதாரணமாக அம்மை போன்ற விடயங்களை சொல்லலாம். அதே போல மலேரியா காய்ச்சலையும் இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
வைரஸ்
எபிடமிக் என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அதிகமாக பரவக்கூடிய நோயாக இருக்கும். உதாரணமாக மழைக்காலத்தில் பலருக்கும் காய்ச்சல் வரும். அந்த குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அந்த வைரஸ் பரவுவது குறைந்துவிடும்.
பாண்டமிக் வகையை சேர்ந்த வைரஸ்கள் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் பரவக்கூடியதாகும். ஒரு நாட்டில் இருந்து மற்ற நாட்டுக்கு இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட மக்கள் பயணிக்கும்போது, அந்த குறிப்பிட்ட நாட்டில் வைரஸ் பரவக்கூடிய சூழல் இருந்தால், அது அங்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
21ஆம் நூற்றாண்டில் ஒரு சில வைரஸ் தாக்குதலால் பல நாடுகள் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் மிகுந்த கவனம் பெற்று, பல உயிர்களை கொன்ற வைரஸ்கள் குறித்து பார்க்கலாம்.
போலா வைரஸ்
மனிதக்குரங்குகள், பழந்தின்னி வெளவால்கள் போன்ற விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கும், ஒரு மனிதரிடம் இருந்து மற்றொருவருக்கும் வேகமாக பரவக்கூடியது இபோலா வைரஸ்.
1976ஆம் ஆண்டு முதன்முதலில் தற்போதைய தென் சூடான் பகுதியிலும், கொங்கோ குடியரசு நாட்டிலும் இபோலா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. கொங்கோ குடியரசில் இபோலா என்ற நதி அருகே உள்ள ஒரு கிராமத்தை இந்த வைரஸ் தாக்கியதால், இதற்கு இபோலா வைரஸ் என்று பெயரிடப்பட்டது.
லைபீரியா, கினியா மற்றும் சியாரா லியோனில் 2013 - 2016 வரை பரவிய இபோலா வைரஸ் தொற்றால் 11,300 பேர் கொல்லப்பட்டனர்.2019ஆம் ஆண்டு ஆகஸ்டில் மீண்டும் ஏற்பட்ட இபோலா தொற்று, மத்திய ஆப்பிரிக்காவில் 1,800 பேரை கொன்றது.
அப்போதைய சூழலை பொது சுகாதார நெருக்கடி நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. திடீர் காய்ச்சல், கடுமையான உடல் சோர்வு, தசை வலி மற்றும் தொண்டை வலி இதன் அறிகுறிகள். நீர்சத்து இழப்பு மற்றும் உறுப்பு செயலிழப்பின் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்படும். நிரூபிக்கப்பட்ட தீர்வு அல்லது சிகிச்சை என்று இபோலா வைரஸிற்கு ஏதுமில்லை. இதற்கான மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.
சார்ஸ் (SARS )
21ஆம் நூற்றாண்டின் மோசமான நோயாகவும், உலக சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாகவும் பார்க்கப்பட்டது சார்ஸ். Severe Acute Respiratory Syndrome என்பதுதான் சார்ஸ் என்பதன் பொருள். தீவிர சுவாசப் பிரச்சினைக்கான நோய்க்குறி என்று அர்த்தம்.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பும் கவலை தெரிவித்திருந்தது. மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய சார்ஸ் வைரஸ், கொரோனா வைரஸ் வகையை சார்ந்தது. 2002ஆம் ஆண்டு தென் சீனாவில் உள்ள குவாங்டாங்க் மாகாணத்தில்தான் முதன்முதலில் இந்த தொற்று கண்டறிப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 26 நாடுகளில் 8,000க்கும் மேற்பட்டோருக்கு சார்ஸ் பாதிப்பு ஏற்பட்டதாக உலக சுகாதார அமைப்பின் வலைதளம் கூறுகிறது.காய்ச்சல், தலைவலி, வாந்தி மற்றும் உடல்நடுக்கம் இதன் அறிகுறிகள். இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட இரண்டாம் வாரத்தில் இருமல், மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு, தீவிரமான சுவாசக் கோளாறில் இது முடியும்.
சார்ஸ் பரவுவது குறித்தும், இதனை கட்டுப்படுத்தவது குறித்தும் உலக சுகாதார அமைப்பு 2003ஆம் ஆண்டு ஜெனீவாவில் உலக நாடுகளுடன் சந்திப்புக் கூட்டம் நடத்தியது. சார்ஸ் வைரஸால் சீனாவில் மட்டும் 774 பேர் உயிரிழந்தனர். இதில் மருத்துவர்களும் அடங்குவர். இதனை கட்டுப்படுத்த தவறியதாக சீனாவை ஜ.நா விமர்சித்தது. தற்போது வரை இதற்கு எந்த சிகிச்சையும் கிடையாது.
ஜிகா வைரஸ்
Aedes எனப்படும் வகையைச் சேர்ந்த நுளம்புக் கடிப்பால் ஜிகா வைரஸ் தொற்று ஏற்படும். இந்த நுளம்பு பகல் நேரத்தில் கடிக்கக் கூடியது. முதன் முதலில் உகண்டாவில் 1947ல் குரங்குகளிடம் இந்த வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் 1952ல் உகண்டா மற்றும் தான்சானியாசில் மனிதர்களிடம் இந்த தொற்று கண்டறியப்பட்டது.
பின்னர் 2007ஆம் ஆண்டுதான் மைக்ரொனீசியாவில் உள்ள யாப் எனும் தீவில் இந்த வைரஸ் தொற்று பதிவாகியது. அதனை தொடர்ந்து 2013ல் பிரெஞ்சு பாலினீசியா மற்றும் பசிபிக் எல்லையில் உள்ள மற்ற நாடுகளில் ஜிகா வைரஸ் ஆயிரக்கணக்கான மக்களை தாக்கியது.
நுளம்பில் இருந்து பரவக் கூடிய ஜிகா வைரஸ் தொற்று, இதுவரை 86 நாடுகளில் பதிவாகியிருக்கிறது. Aedes நுளம்பு வகைதான் டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களையும் பரப்புகிறது. காய்ச்சல், தடிமன், தசை மற்றும் மூட்டு வலி, தலைவலி ஆகியவை இதன் அறிகுறிகள். ஜிகா வைரஸிற்கு இதுவரை எந்த சிகிச்சையும் கிடையாது.
அமெரிக்கா வரை பரவிய சீன வைரஸ்: புதிரான சீன வைரஸ் 2015ல் பிரேசிலில் இந்த வைரஸ் தொற்று பரவி பெரும் பாதிப்பை உண்டாக்கியது.
நிபா வைரஸ்
நிபா தொற்று விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு கடுமையான நோயை உண்டாக்கும் வைரஸாகும். இதன் பிறப்பிடம் Fruit bats எனப்படும் பழந்தின்னி வெளவால்கள். 1998ஆம் ஆண்டு முதன்முதலில் மலேசியாவில் இந்த வைரசால் நோய் தொற்று ஏற்பட்டது. வெளவால்களிடம் இருந்து பன்றிகளுக்கு இந்த நோய் பரப்பப்பட்டது.
2004ஆம் ஆண்டு வங்க தேசத்தில் பழந்தின்னி வெளவால்கள் கடித்த பனம்பழத்தை சாப்பிட்ட மனிதர்களுக்கு நிபா வைரஸ் பரவியது. ஒரு மனிதரிடம் இருந்து மற்றவருக்கு பரவுவதும் கண்டறியப்பட்டது.இந்த வைரஸ் தொற்றால் கடுமையான சுவாசப் பிரச்சனை ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படலாம்.இந்தியாவின் கேரளா மாநிலத்தில் 2018ஆம் ஆண்டு நிபா வைரஸ் பரவிய போது, 17 பேர் உயிரிழந்தனர். முக்கியமாக கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் இது பரவியது.
நிபா வைரசால் பாதிக்கப்படும் மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ எந்த தடுப்பூசியும் இல்லை. இதனால் பாதிக்கப்படும் மனிதர்கள், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டும். காய்ச்சல், தலைவலி, தசை வலி, வாந்தி மற்றும் தொண்ட வலி ஆகியவை இதன் அறிகுறிகள் மேலும் மயக்கம், நரம்பு பிரச்சனைகளும் ஏற்படலாம். இந்த வைரஸி ற்கு தற்போது வரை எந்த தடுப்பூசியும் கிடையாது.
கொரோனா வைரஸ்
2019 இல் சீனாவின் வுஹான் நகரில் ஆரம்பித்த கொவிட்-19 பன்டமிக் (Pயனெயஅiஉ) வைரஸ் இன்று வரை உலக நாடுகள் அனைத்திலும் மனித உயிர்களைப் பலியெடுத்துக் கொண்டேயிருக்கும் ஒரு உயிர்கொல்லி வைரஸ் ஆகக் காணப்படுகின்றது. தொடர்ந்து
உருமாற்றத்தை ஏற்படுத்தி தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கும் உருமாற்றம் கொள்ளும் வைரசின் பரிணமிப்புக்கள் மருத்துவ விஞ்ஞான உலகிற்கு பெரும் சவாலை ஏற்படுத்துவதாக உள்ளது
புதிய கொரானா
புதிய கொரானா தொற்று நோய்க் கிருமிகள் தோற்றம் குறித்தும், அவற்றின் பாதிப்புகள் குறித்தும் உலக அளவில் விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. தொற்றுநோய் கிருமிகள் உருவாவதும், எண்ணற்ற மக்களை கொல்வதும் உலகத்திற்கு புதிய நிகழ்வன்று. சரியாக, ஒரு நூற்றாண்டுக்கு முன்புகூட ஸ்பானிஷ் ஃப்ளூ என்ற தொற்றுக்கிருமி கோடிக்கணக்கான மனித உயிர்களை பலி கொண்டது. இது மட்டுமல்ல தொற்றுநோய்க் கிருமிகள் உலகத்தின்மீது படையெடுப்பை நிகழ்த்துவதும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதும் வாடிக்கையாக நிகழக்கூடிய ஒன்றாக மாறிவிட்டது.
கொரோனா - சுற்றுச்சூழல் சீர்க்கேட்டின் உச்சம்
உழைக்கின்ற மக்களை கொடூரமான சுரண்டிவரும் பன்னாட்டு முதலாளித்துவம் தீராத வர்க்கப் பிளவை உருவாக்கியுள்ளது. அதேபோல இயற்கையின் வளங்களை வகைதொகையின்றி பறிப்பதன்மூலம் இயற்கைக்கும், மனிதனுக்கும் இடையிலான வளர்சிதை மாற்றத்தில் தீராத பிளவை ஏற்படுத்தியுள்ளது.
இதன் விளைவாக இயற்கை ஒட்டுமொத்த மனித இனத்தின்மீது எதிர்பாராத வகையில் மீண்டெழ முடியாத வகையில் தனது எதிர்வினையை ஆற்றிவருகின்றது.பன்னாட்டு நவீன விவசாயப் பண்ணைகளும், இலாபவெறியை ஊட்டும் சந்தைப் பொருளாதாரமும், ஏகாதிபத்தியத்தின் கொரூரமான சுரண்டலும்தான் புதிய புதிய தொற்றுக் கிருமிகள் உருவாவதற்கான காரணிகளாக அமைகின்றன.
இத்தகைய சூழ்நிலைகளில் உருவானதுதான் புதிய கொரோனா தொற்றுக்கிருமி. அது மட்டுமின்றி, இயற்கையின் நுரையீரலாகவும், இதயமாகவும் விளங்குபவை எல்லாம் ஈவிரக்கமின்றி அழிக்கப்பட்டு வருகின்றன. முதலாளித்துவம் இயற்கையின்மீது செலுத்திவரும் வரம்பற்ற ஆதிக்க நடவடிக்கைகளுக்கு எதிராக தற்போது இயற்கையின் தனது எதிர்வினையின்மூலம் ஒட்டுமொத்த மனித சமூகத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.
இந்த எதிர்வினையில் விளைவாக உருவான ஒரு புதிய பரிணாமம்தான் புதிய கொரோனா வைரஸ். மனித இனம் இயற்கையின் முதலாளியும் அன்று இயற்கையிலிருந்து பிரிந்து தனித்த தகுதியை பெற்றிருப்பதுமன்று மாறாக, இந்த உலகத்தின் ஒரு பகுதிதான் என்பதை கொரானா வைரஸ் நமக்கு மீண்டும் நினைவூட்டுகிறது.
முதலாளித்துவம், சோசலிசம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கு இடையேயான உறவு பற்றி இன்னும் முழுமையாக ஆராயப்படவில்லை. பன்னாட்டு முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடிகளை ஆராயும் அதே நேரத்தில் இன்று முதலாளித்துவத்தின் வளர்ச்சியால் உருவான சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்தும் ஆராய வேண்டிய தேவையும் இணைந்திருக்கின்றது என்பதை உணரமுடிகிறது.
இவை குறித்த கோட்பாட்டையும் நடைமுறையையும் உருவாக்குவது நமது அனைவரின் கடமையாகும். ஏனெனில் இயற்கையைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கையளிக்கவேண்டிய பொறுப்பு நம்மிடம் இருக்கின்றது.
பெரிய பண்ணைகள் பெரிய காய்ச்சலை உருவாக்குகின்றன.
நவீன அறிவியல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியின் விளைவாக, உற்பத்தி மற்றும் உணவு அறிவியலில் எண்ணற்ற முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. என்றாலும், விவசாய வணிகமானது அதிக உணவுப் பொருட்களை விளைவிப்பதிலும், புதிய இடங்களைக் கைப்பற்றி விளைச்சலை பெருக்கிக் கொள்வதிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆயிரக்கணக்கான கலப்பினக் கோழிகள், மிகச் சிறிய இடங்களில் அடக்கிவைத்து, சில மாதங்களில் வளர்த்து, பின்னர் அவற்றைக் கொன்று, பதப்படுத்தப்பட்டு, உலகத்தின் பல பகுதிகளிலுக்கும் அனுப்பப்படுகின்றன.
மனிதர்களுக்கு வரும் மிகவும் ஆபத்தான புதிய நோய்கள் பலவற்றை, முதலாளித்துவம் உருவாக்கி கொடுத்த புதிய உணவு முறைகளில் காணலாம். சிறப்பு விவசாயச் சூழல்கள்தான் கொடிய நோய்க்கிருமிகள் தோன்றுவதற்கு இடமளிக்கின்றன. அவற்றில் காம்பிலோபாக்டர், நிபா வைரஸ், கியூ காய்ச்சல், ஹெபடைடிஸ் இவை போன்ற மற்றும் பலவிதமான புதிய தொற்றுநோய்க் கிருமிகளின் வகைகளும் அடங்கும்.
'பெரிய பண்ணைகள் பெரிய காய்ச்சலை உருவாக்குகின்றன' என்ற நூலை எழுதிய ராப் வாலஸ் என்பவர் ஒரு பரிணாம உயிரியலாளர் மற்றும் தொற்றுநோய் நிபுணர். இவரது ஆய்வின் மூலம் பன்னாட்டு நிறுவனங்களின் விவசாய பண்ணைகளிலிருந்து இன்ஃப்ளூயன்ஸா மற்றும் பிற நோய்க்கிருமிகள் உருவாவதைச் சுட்டிக் காட்டுகிறார். இந்நூலில், தொற்று நோய்கள், விவசாயம், பொருளாதாரம் மற்றும் அறிவியலின் தன்மை ஆகியவற்றை ஒருங்கிணைந்த வகையில் ஆராய்கிறார்.
மேலும் இறகு இல்லாத கோழிகளை உற்பத்திச் செய்வதன் மூலம் எபோலா போன்ற கொடிய நோய்க் கிருமிகள் உருவாகின்றன என்று கூறுகின்றார். நோய்களின் அரசியல் பொருளாதாரத்தையும் அறிவியலையும் ஒருங்கே இணைத்து தொற்று நோய்களைப் பற்றிய புதிய தெளிவை ஊட்டுகிறார். ராப் வாலஸ் இந்நூ லில், நம்முடைய விவசாய தொழில்துறை அமைப்பில் உள்ள சிக்கல்களைத் தெளிவாக வெளிப்படுத்துகிறார். இந்நூல் அரசியல,; சூழலியல் பற்றி முழுமையான புரிதலை வழங்குகிறது.
நிறைவாக...
எனவே இவை எல்லாவற்றையும் கருத்தில் இருத்தி பாரம்பரிய உணவு முறை, மருத்துவ முறை போன்றவற்றில் இருந்து விலகிச் சென்ற எமது சமூகம் மீண்டும் இவற்றின் மகிமையை உணர வேண்டிய தேவை இன்று எழுந்துள்ளது.மனித உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டும் இஞ்சி, மஞ்சள், சுக்கு போன்றவற்றினதும் உடல் ஆரோக்கியத்தைப் பேணும் ஏனைய பாரம்பரிய உணவு வகைகளினதும் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவதாக பொருத்தமான பாடப்பரப்புக்கள் மற்றும் அலகுகளில் இணைத்துக் கற்பிக்கும் வகையிலான ஆசிரியரது கற்பித்தற் செயற்பாடுகள் அமையப் பெறுவது காலத்தின் தேவையாக உள்ளது.
மூலம்:- ஆசிரியம் சஞ்சிகை பங்குனி சித்திரை இதழ்
மேலும் பல கல்வி சார்ந்த, அறிவியல் சார்ந்த கட்டுரைகளை படிக்க ஆசிரியம் சஞ்சிகை வாங்கி படியுங்கள்.