ஐம்பது வயது நந்து (பார்த்திபன்) ஒரு சினிமா ஃபைனான்சியர். அவரிடம் வட்டிக்குப் பணம் வாங்கி படமெடுத்த இயக்குநர், அதைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் மனைவியுடன் தற்கொலை செய்துகொள்கிறார். அந்த மரணம், ஊடகங்களில் பேசுபொருளாகிறது.
இயக்குநரின் தற்கொலைக்கு நந்துதான் காரணம் என நம்பும் அவருடைய மனைவியும் மகளும் அவரை வெறுத்து வீட்டைவிட்டு வெளியேறி காணாமல் போய் விடுகிறார்கள். ஃபைனான்சியர் நந்துவைக் கைது செய்ய போலீஸ் துரத்துகிறது.தனது கைத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டு கிளம்பும் நந்து, ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்து தற்போது பாழடைந்து, புதர்மண்டிக் கிடக்கும் தனக்கு மிகவும் பரிச்சயமான ஆசிரமத்துக்குள் போய் ஒளிந்துகொள்கிறார். அங்கிருந்து, ஊடகங்கள்அறிந்திராத, தன் வாழ்க்கைக் கதையை தனது திறன்பேசியில் ‘ஆடியோ’வாகப் பதிந்தபடி விவரிக்கத் தொடங்குகிறார்.
1971-ல் கதை தொடங்குகிறது... கணவனால் கொலையுண்டு ரத்தச் சகதியாகக் கிடக்கும் தன்னுடைய தாயின் சடலத்தில் பால் குடிக்க முயலும் ஆறு மாதக் குழந்தையாக நமக்கு அறிமுகமாகும் நந்துவின் 10 வயது, 18 வயது, 30 வயது, 40 வயதுபருவங்களின் ‘ரோலர் கோஸ்டர்’ வாழ்க்கையில், அவர் எப்படி ‘இரவின் பிரதி’யாக மாறிப்போனார், அவருடைய ‘நிழல்’ அவரை எதுவரை துரத்திக்கொண்டு வந்தது என்பதை கதை விவரிக்கிறது.
கதை நிகழும் காலம் சமகாலமாக இருந்து, கதைநிகழும் களமும் ஒரே இடமாக இருந்து, நிகழும் சம்பவங்களின் வரிசை ஒரே நேர்கோட்டில் சொல்லப்பட்டால், அதை ‘எளிய விவரிப்பு முறை’ என்கிறோம்.
அதுவே கதாபாத்திரங்கள் உலவும் நிலமும் காலமும்வெவ்வேறு காலகட்டமாகவும் இடங்களாகவும் இருந்து, அதில் சம்பவங்களின் வரிசையை முன்பின்னாகக் கலைத்துச் சொன்னால் அதை ‘நான் லீனியர்’ விவரிப்பு என்கிறோம்.
இந்த இரண்டில், எளிய விவரிப்பு முறை கொண்டகதைகளை உலகின் பல நாடுகளில் ஒரே ஷாட்டில்படமாக எடுத்திருக்கிறார்கள். ஆனால், ‘நான் - லீனியர்’ திரைக்கதை விவரிப்பைக் கொண்ட ‘இரவின் நிழல்’ ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருப்பதைக் காணும்போது, முதல் நொடியில் தொடங்கி, கதை முடியும் கடைசி நொடி வரை வியப்பூட்டக்கூடிய திரை அனுபவமாக திரையில் விரிகிறது.