- மாவோ சேதுங் -
தனியே நிற்கிறேன் வீழ்கால குளிர் உறைக்க.
ஷியாங் ஆறு வடதிசை ஏகுமிடத்தின்
செம்மஞ்சள் தீவு முனையில்;
செவ்வழலாய் நிறம்பற்றியெரியும் மரங்கள்
படர்ந்துவிரிந்த கானக மலைகள்
ஆயிரமாயிரம் காண்கிறேன்.
நீல நீர்களில் நூறு படகுகள்
பாய்ந்துச்செல்வதைப் பார்க்கிறேன்
விண் பிளக்கும் கழுகுகள்.
நீரடியில் சீறும் கயல்கள்.
உறைந்து நிற்கும் வானின் கீழே,
சுதந்திரம் நாடி போரிடும் உயிர்கள்.
வேதனைபடரக் கேட்கிறேன்,
பாரொடு விண்ணாய் பரந்த இப்புவியில்
மூழ்கவோ மிதக்கவோ, விதிப்பவர் யாரோ?
நூறு தோழரும் முன்பொருநாள்.
இணைந்து வந்தோம்-
அற்றைத் திங்கள், அந்த ஆண்டு,
மறத்தல் இல்லை, நிறைவான நாட்கள்.
துடிக்கும் இளையர், பள்ளி மாணவர்,
கொள்கையில் நேர்மை, பிறழாத வழிகள்.
உணர்ச்சிப் பிழம்பு, தடை தளை தகர்ப்பு...
மலை நதி சுட்டி, திசைவழி காட்டி,
சொல்தீ வளர்த்து மக்களை எழுப்பினோம்.
நினைவில் நிற்குமோ இன்றும்,
அன்று
நீர்மிசை பரந்து நீண்டு சென்றதும்
பாய்ந்தப் படகினை நீரலை தடுத்ததும்?